பகுதி 38 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 13, 2015

பகுதி 38



விழுதல் என்பது எழுகையே..
பகுதி 38 

எழுதியவர் செல்வன் .மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்
அறிமுகம்

மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்
இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம்  மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்ஃபண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர்  11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது  முதல் நூலான "வைரம்" கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ். 
2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான "சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு"என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது. 
இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இவருக்கு "கவி அரசு"என்ற கௌரவத்தையும் வளங்கி கௌரவித்தார். 
  பல பத்திரிக்கைகள் இசஞ்சிகைகள் ,இணைய வலைத்தளங்கள் பலவற்றிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றது  பன்முகம் ஆற்றல் மிக்கவராக சிறுவயதில் திகழ்கிறார்  
            தற்போது இருஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் அங்கு கல்விற்றுக்கொண்டிருக்கும் மாணவன் 16 வயது சிறுவன் குலராஜ் இலக்கியத்துறையில் தன்னை அடையாளம் காட்டிவருகின்றார். அவர் எமது பெருந் தொடர் கதையை வாசித்து தானும் இதில் எழுத வேண்டும் என்று வாய்ப்பை தானாக வலிந்து பெற்றுக் கொண்டார்.  விழுதல் என்பது எழுகையே தொடரை எழுதிய இஎழுதவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மிக பிரபலியமான நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சார்பாகவும்  தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாகவும் சிறுவன் குலராஜ்சை ஊக்கமளிக்கவேண்டியது எமது கடமையாகும்.


தொடர்கிறது  பகுதி 38
 
தொலைபேசி  மணி அடிக்கத் தொடங்கியது.
தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு அவசரமாக தொலைபேசியை எடுத்தான்  சீலன்.
 „சீலன் நான் டேவிட் கதைக்கிறன்“ என்று டேவிட் அங்கிளின் குரல் மறுமுனையில் ஒலித்தது.
„என்ன அங்கிள் இப்பத்தானே போன் பண்ணிணீங்க என்ன விசயம் சொல்லுங்கள்“ எனறு சீலன் கேட்க,
„சீலன் இப்பத்தான் போன் பண்ணினான்.......“என்று சொல்லிய டேவிட் அங்கிள் „சீலன்......“ என்று அவரின் குரல் மெல்ல தளர்ந்தது.
„என்ன விசயம்  அங்கிள் எதுவென்றாலும் பரவாயில்லை சொல்லுங்கள்“என்றான் சீலன்.
„சீலன் என்னைக் குறை நினைக்காதை நான் அனுப்பிறன் என்று சொன்ன இரண்டாயிரம் பிராங்கை என்னால் அனுப்ப முடியாமலிருக்கிறது.....குறை நினைக்காதை சீலன்“ என்று டேவிட்  கவலையுடன் சொல்லுகிறார்.
பணம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சீலனுக்கு இது ஏமாற்றந்தான். இருந்தாலும் டேவிட் அங்கிள் சுவிஸ்ஸில் நிறைய உதவி செய்திரக்கிறார். இப்பொழுது உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலிருக்கிறார் என நினைத்துக் கொண்ட சீலன் ஏன்,எதற்காக என்று கேட்காமல்,
„பரவாயில்லை அங்கிள் நான் பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கிறான்.“என் கையே எனக்கு உதவி“ என்ற பழமொழியை தனக்காகப் புதுபித்து நெஞ்சில் பதித்தான்.
எங்கே போவது யாரைப் பார்ப்பது என்ற வினா மட்டும் சீலனின் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. என்னடா இந்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு வீதியில் நடந்து கொண்டிருந்தான்.உடல் மட்டுந்தான் வீதியில் நடந்து கொண்டிருந்தது. உள்ளம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. யாரிடம் போவது என்ன செய்வது என்று எதையும் சிந்திக்க முடியாது திக்கித் தவித்தான்.
இங்கேதானே நிறைய தமிழ்க்கடைகள் இருக்கு. அவர்களிடம் ஏதாவது வேலை கேட்டுப் பார்ப்போம் என்று யோசித்தவன் வேலை கேட்டு எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்கினான்.
„இப்ப ஆள் இருக்கு பிறகு பார்ப்போம்“ என்ற ஒரே பதிலே எல்லோர் வாயிலும் இருந்து வந்தது.
சீலன் ஏறி இறங்கிய கடைகளில் ஒரு கடையில் பணிபுரிந்த ஒருவர்,
„உங்களுக்கு வேலைதானே வேணும்“ என்று சீலனிடம் கேட்க சீலனும்,“ஓம் ஓம்“ என்று கொஞ்சம் புன்னகை பூத்த முகத்துடன் தலை அசைத்தான்.
„தம்பி என்னுடைய பெயர் காந்தன்“ என்று அவர் சீலனுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சீலனும்“எனது பெயர் சீலன்“ என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.
„தம்பி எனக்குத் தெரிந்து ஒரு முதலாளி இருக்கிறார், தமிழ் ஆள்தான் அவர் நல்ல மனுசன் நான் உங்களை அவரிடம் அறிமுகப்படுத்துகிறன், அவர் உங்களுக்கு நிச்சயம் வேலை தருவார்“ என்று சீலனிடம் காந்தன் கூறி அவரிடம்  சீலனை அழைத்துச் சென்றான்.
„வணக்கம் அண்ணை“ என்று காந்தன் வணக்கம் சொன்னான்.
„வணக்கம் தம்பி பார்த்து கனநாள் ஆச்சுது இந்தப் பக்கம் இப்ப வாறதே இல்லை  தொலைபேசி எடுக்கிறதும் இல்லை“ என்று அந்த முதலாளி காந்தனிடம் கேட்கிறார்.
உடனே காந்தன் „எங்கையண்ணை நேரம் கிடைக்குது,தொலைபேசி எடுக்கவே நேரம் இல்லை. வேலை வேலை முடிஞ்சா நேர வீடு அப்படி வாழ்க்கை ஓடுது“ என்று காந்தன் பதில் அளித்தான்.
அவர்களின் தனிப்பட்ட உரையாடல் முடிவுக்கு வந்தது.முதலாளி காந்தனிடம்“யார் இந்தத் தம்பி“என்று சீலனை பற்றி விசாரித்தார்.
„எனக்கு தெரிந்தவர்தான் பெயர் சீலன். இப்பதான் இவர் இங்கை வந்தவர்.இவருக்கு விசாவும் இல்லை வேலையும் இல்லை இவருக்கு தயவு செய்து வேலை கொடுங்களேன்“ என்று காந்தன் முதலாளியிடம் கேட்டான்.
கொஞ்ச நேரம் முதலாளி சீலனை பார்த்தபடி யோசித்தார்.
பிறகு „சரி நான் வேலை கொடுக்கிறன், என்ன வேலை என்றால் என் கடையில் சாமான்கள் அடுக்கும் வேலை. ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்து மணிவரையும் வேலை. ஞாயிற்றுக்கிழமை மட்டுந்தான் லீவு. சம்பளம் அறுநூறு குரோன்கள்.ஓகே என்றால் இன்றைக்கே வேலையில் சேருங்கள்“ என்று முதலாளி சீலனிடம் கூறினார்.
சீலன் உடனே, கடவுள் இப்பொழுதுதான் கண்ணைத் திறந்திருக்கிறார் என மனதில் நினைத்தபடி „சரி அண்ணை“என்று கூறிவிட்டு வேலையில் சேர்ந்தான்.
சீலன் வேலை செய்து கொண்டிருக்கும் போதே“தம்பி நீங்கள் இப்ப எங்கை இருக்கிறீர்கள்“ எனக் கேட்டார்.
„இப்போதைக்கு நிரந்தரமான ஒரு இடமும் கிடைக்கவில்லை, இனித்தான் இடம் பார்க்க வேணும்“ எனப் பதில் அளித்தான் சீலன்.
சீலனின் நிலையை முதலாளி புரிந்து கொண்டார்.
„தம்பி இந்தக் கடைக்கு மேலே ஒரு அறை இருக்குது அதில் தங்குகிறீர்களா“ என முதலாளி கேட்க சீலன் அதற்கச் சம்மதித்தான்.
„அங்கை ஒரு சின்ன அடுப்பு வைத்துச் சமைக்கலாம்;“  என்று சொல்லிவாறே  கடையின் ஒரு மூலையிலிருந்த அலுமாரிக்குள்ளிருந்து அடுப்பு பானை சட்டி எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தார்.
அவர் தொடர்ந்து, „நான் கல்யாணம் செய்ய முதல் இந்த அறையிலைதான் இருந்தனான்,இந்தச் சட்டி பானை அடுப்பு எல்லாம் நான் பாவித்தவை பரவாயில்லைத்தானே“ என முதலாளி சீலனைக் கேட்க „ஒரு பிரச்சினையும் இல்லை, நன்றி அண்ணை „ என்று வாங்கிக் கொண்டான்.
„சமையல் சாமான்கள் வாங்க காசு இருக்கா“ எனக் கேட்க மௌனமாக நின்றான். அவன் நிலையைப் புரிந்து கொண்ட முதலாளி ஐம்பது குரோன்களை அவனிடம் கொடுத்து கடையள் பூட்ட முந்தி கெதியிலை போய் சமையல் சாமான்களை வாங்கிவரச் சொல்லுகிறார்.
முதல் நாள் வேலை என்றபடியால் சீலனிடம் „சாமான்களை வாங்கிக் கொண்டு போய் அறையில் சமையுங்கள், வேலைக்கு வர வேண்டாம், நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுங்கள், நாளண்டைக்கு தொடக்கம் வேலைக்கு வாருங்கள்“ எனச் சொல்லி சீலனை சமையல் சாமான்களை வாங்க கடைக்கு அனுப்பி வைக்கிறார்.
சீலனும் விறுவிறுவென்று கடைக்குச் சென்று தனக்குத் தேவையான உணவு பொருட்களை வாங்கி வந்து சமைத்துவிட்டு சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓங்வெடுத்தான்.
காந்தனுடன் கடை முதலாளியைச் சந்தித்த போது நேரம் மாலை நான்கு மணியிருக்கும். கட்டிலில் படுத்திருந்து சீலன் தன்னிலையை யோசிக்கத் தொடங்கினான். 
ஊரிலிருந்த தன்னை காலம் எங்கேயோ தூக்கி எறிந்ததை நினைத்து கவலைப்பட்டாலும் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தான் இப்பொழுது டென்மார்க் நாட்டில் ஏதூ ஒரு இடத்தில் ஒரு கடைக்கு மேலே உள்ள ஒரு சிறு அறையில் கட்டிலில் படுத்திருக்கிறான்.
உடலின் களைப்பு அவனைத் தூங்க வைத்துவிட்டது. அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. நித்திரைக் கலக்கத்தில் தான் எங்கேயிருப்பதென்று தெரியாத சீலன் தட்டுத்தடுமாறி எழுந்து லைட்டைப் போட்டு கதவைத் திறந்தான்.
எதிரே கடை  முதலாளி நின்றிருந்தார். கையில் இரண்டு பார்சல்கள் வைத்திருந்தார்.
„இந்தாருங்கள் சீலன் இந்தப் பார்சலில் இடியப்பமும் சம்பலும் இருக்கு. வீட்டுக்கு போன எனக்கு மனம் வரவில்லை, நீங்கள் சமைச்சியளோ சாப்பிட்டியளோ தெரியாது அதுதான் இடியப்பம் கொண்டு வந்தனான் „ என்று சொல்லிக் கொண்டு இடியப்பத்தை சீலனின் கையில் கொடுத்தார்.
„நன்றி“ என்று கூறிவிட்டு வாங்கிய சீலன் தானும் சமைத்துவிட்டதாகச் சொல்லுகிறான்.
„பரவாயில்லை அதை நாளைக்குச் சாப்பிடலாம், இப்ப இடியப்பத்தைச் சாப்பிடுங்கள்“ என்று சொன்ன கடை முதலாளி இன்னொரு தட்டையான பெட்டியை சீலனின் கொடுத்தார். 
சீலன் அதை பிரித்துப் பார்த்த போது அதற்குள் ஒரு சுவர் கடிகாரம் இருந்தது. கடைக்கார முதலாளி சீலனிடமிருந்து கடிகாரத்தை  வாங்கி அதில் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை சரி செய்து கொடுத்தார்.
சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் அப்பொழுது நேரம் இரவு பத்து மணி. கடை முதலாளி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக விடிந்தது. அலைக்கழிவிலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் ஒரு ஆறுதல் கிடைத்தது போலிருந்தது ஞாயிற்றுக்கிழமை ஓய்வு.

தொடரும் ...

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here