இன்று காலை 10.30 மணியளவில் மட்/பட்/ கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபர் திரு ஏகாம்பரம் அவர்களின் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன். செல்வராசா அவர்களுடன் வித்தியாலய அதிபர் மற்றும் சமூக உயர்கல்வி சேவைகள் சங்க உறுப்பினர்கள், உயர்தரவகுப்பு மாணவர்களின் பெற்றோர், நலன் விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலை ஆரம்பித்துவைக்கும் முகமாக வித்தியாலய அதிபர் திரு S.செல்வராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெறக் காரணமாய் அமைந்த பிரத்தியேக வகுப்புக்களை நாடத்துவதற்கு நிதியுதவி வழங்கிய எமது கிராமத்தை சேர்ந்த புலம்பெயர் உறவுகளுக்கும், சிறப்பாக நடாத்த ஒத்தாசை வழங்கிய சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தினருக்கும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவரகளிற்கும் நன்றியை தெரிவித்ததுடன் இச் செயர்த்திட்டத்தை இவ்வருடமும் தொடர்ந்தும் நடாத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறினார்.
அவரைத்தொடர்ந்து சமூக உயர்கல்வி சேவைகள் சங்க ஆலோசகர்களில் ஒருவரான திரு ஏ.அருள்பிரகாசம் அவர்கள் கூறுகையில் இச் செயற்திட்டத்தை எம்மால் சிறப்பாக நடாத்துவதற்கு நிதியுதவி வழங்கிய எமது கிராமத்து கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட புலம்பெயர்வாழ் எம்மவர்களின் உதவி மிகவும் பாராட்டத்தக்கது என்றும் தொடர்ந்தும் அவர்கள் உதவிபுரிவார்கள் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.
கடந்த வருடம் எமது கிராமத்தில் இருந்து வெளியூரில் கல்வி பயிலும் எமது மாணவர்களை இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளாதது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் இவ்வருடம் நடக்கும் இச் செயற்திட்டத்தில் அவர்களை கட்டாயம் உள்வாங்க வேண்டும் எனவும் சமூக உயர்கல்வி சேவைகள் சங்க செயலாளர் நிஷாந்தன் அவர்கள் தனது கருத்தை மிகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.
54 உயர்தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிற்கு கலந்துரையாடல்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்ட போதிலும் 18 பெற்றோர்களே கலந்து கொண்டது கவலை அளிப்பதாகவும் பெற்றோர்கள் மாணவர் கல்வியில் கவனம் எடுக்காவிட்டால் அவர்களின் கல்விச் செயற்பாட்டில் பின்னடைவு ஏற்படும் என்றும் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய திரு ஏகாம்பரம் அவர்கள் தெரிவித்தார்.
சமூக உயர் கல்வி சேவைகள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகத்திற்கிடையே முரண் பாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் செயற்பட்டு கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் பாடசாலையில் குறைபாடாக உள்ள ஆய்வுகூட வசதியை ஏற்படுத்தித் தருமாறு பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இறுதியாக கருத்துத் தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன். செல்வராசா அவர்கள் "" வெளிநாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் இம்முறையும் மிகவும் சந்தோசத்துடனும் நம்பிக்கையுடனும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவார்கள் ஏனெனில் கடந்த வருடம் அவர்கள் வழங்கிய உதவிக்கு எம்மால் சிறந்த பெறுபேறை வழங்க முடிந்தது என சுட்டிக்காட்டினார். அத்துடன் எமது பாடசாலை 1AB பாடசாலையாக மாற்றப்பட்டதன் காரணமாக கிராமத்து மக்கள் விரும்பினால் பாடசாலையின் பெயரினை "கோட்டைக்கல்லாறு மத்திய கல்லூரி " அல்லது "கோட்டைக்கல்லாறு மத்திய மகாவித்தியாலயம்" என்ற பெயர்களில் ஒன்றை தெரிவு செய்து தந்தால் உத்தியோக பூர்வமாக எம்மால் மாற்றித்தர முடியும் எனக் கூறினார்.
கலந்துரையாடலின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1.கடந்த வருடம் நடைபெற்றது போன்று இவ்வருடமும் புலம் பெயர் வாழ் மக்களிடம் நிதி உதவி பெற்றுக்கொள்வது.
2.இவ் வகுப்புகளிற்கான சகல நிதி கொடுக்கல் வாங்கல்களும் சமூக உயர்கல்வி சேவைகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.
3.பிரத்தியேக வகுப்புக்கான ஆசிரியர்களை சமூக உயர்கல்வி சேவைகள் சங்கமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
4.பிரத்தியேக வகுப்புக்களை பாடசாலை அதிபருடன் இணைந்து சமூக உயர்கல்வி சேவைகள் சங்கமே நடாத்த வேண்டும்.
5.வெளியூர் பாடசாலைகளில் படிக்கும் எமது கிராமத்து மாணவர்களையும் இச் செயற்த்திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க விடயமாக கலந்துகொண்ட அனைவரும் பாடசாலையின் பெயரானது "கோட்டைக்கல்லாறு மத்திய மகாவித்தியாலயம்" ஆக மாற்றுவது சிறந்து என்று கருத்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment